Publisher's Synopsis
அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே வரலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை ஒரு நவீன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டுகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத் திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம். நம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும் உரையாட விரும்பியதால்தான் தூண்களிலும் கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார் அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது, அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும் என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும் நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால் மட்டும் என்கிறார் அவர். அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம் என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.